செல்போன் மோகத்தால் சென்னைக் கல்லூரி மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செல்போன் கேம்ஸ்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவில் உள்ள ஸ்ரீராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு மதுமிதா என்ற மகளும் சுரேஷ் கிருஷ்ணா மகனும் உள்ளனர்.
சுரேஷ் கிருஷ்ணாவுக்கு 2 வயது இருக்கும்போது ராஜேந்திரனின் மனைவி இறந்துவிட்டார்.
இதையடுத்து ராஜேந்திரன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆதரவின்றி தவித்த மதுமிதா, சுரேஷ் கிருஷ்ணாவை அவரின் தாத்தா, பாட்டி வளர்த்தனர்.
அவர்களின் மறைவுக்குப்பிறகு இருவரும் சென்னையில் உள்ள தாய்மாமன் வீட்டில் அடைக்கலம் அடைந்தனர்.
சென்னை கீழ்கட்டளை, துரைராஜ்நகரில் உள்ள தாய்மாமன் வீட்டில் தங்கியிருந்த சுரேஷ்கிருஷ்ணா(18). இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவரின் அக்காள் மதுமிதா (21), நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
இந்தநிலையில் ஊரடங்கு காரணமாக கல்லூரிக்குச் செல்லாமல் இருவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மதுமிதா, செல்போனில் கேம்ஸ் விளையாடுவதும் சேட்டிங் செய்வதுமாகவும் இருந்துள்ளார்.
போனில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்துள்ளார். அதை தாய்மாமனும் தம்பியும் கண்டித்துள்ளனர். அதன்பிறகும் மதுமிதா செல்போனிலேயே நேரத்தை செலவழித்து வந்துள்ளார்.
தற்கொலை
இதையடுத்து, மதுமிதாவின் செல்போனை அவரின் தாய்மாமன் பிடுங்கி வைத்துக் கொண்டார். அதனால் மனவிரக்தியடைந்த மதுமிதா, வீட்டில் சகஜமாக யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார். கடந்த 26-ம் தேதி குளிப்பதற்காக அவர் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த மதுமிதாவின் தாய்மாமன், மற்றும் அவரின் தம்பி சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் கதவை தட்டியுள்ளனர்.
அப்போது மதுமிதாவிடமிருந்து எந்தப்பதிலும் வரவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்ற தாய்மாமன், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
குளியலறையில் மதுமிதா, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக மதுமிதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மதுமிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து சில மணி நேரமாவதாக கூறினர்.
தகவலறிந்ததும் மடிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். பிரேத பரிசோதனைக்குப்பிறகு மதுமிதாவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஊரடங்கு காலக்கட்டத்தில் செல்போன் மோகத்தால் கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.