டெல்லியில் கொரோனா வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி பெண் போலீஸ் அதிகாரி சிக்கினார்.
டெல்லி திலக் நகர் பகுதியில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். முகக்கவசம் அணியாமல் சென்றவர்களையும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் சென்றவர்களையும் மடக்கிப் பிடித்து அபராதம் வசூலித்து கொண்டிருந்தார்.
அதற்கான ரசீதுகளையும் மறக்காமல் கொடுத்தார்.
திலக் நகர் தலைமை கான்ஸ்டபிள் சுமீர் சிங் அந்த வழியாக சென்றார். அப்போது புதிய போலீஸ் அதிகாரியை பார்த்து அவருக்கு சந்தேகம் எழுந்தது.

சாதாரண உடையில் இருந்த மற்றொரு கான்ஸ்டபிளை முகக்கவசம் அணியாமல் அவ்வழியாக நடந்து செல்ல உத்தரவிட்டார்.
அந்த கான்ஸ்டபிள் நடந்து சென்றபோது அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரி அவரை பிடித்து அபராதம் விதித்தார்.
நீங்கள் எந்த போலீஸ் ஸ்டேசன் என்று கான்ஸ்டபிள் கேட்க, திலக் நகர் போலீஸ் நிலையத்தின் அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறியுள்ளார். அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டபோது பெண் போலீஸ் அதிகாரி திணறினார்.
இதைத் தொடர்ந்து திலக் நகர் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தபோது, அபராதம் விதித்து வசூல் வேட்டை நடத்திய போலி போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்தது.
அவரது பெயர் தமன்னா (வயது 20).
அவர் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், “பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக காதல் திருமணம் செய்து கொண்டேன். கொரோனா வைரஸ் காரணமாக எனக்கும் கணவருக்கும் வேலை கிடைக்கவில்லை. அதனால் போலீஸ் உடை அணிந்து வசூல் செய்தேன்” என்று தெரிவித்தார்.தமன்னா மீது போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.