யாரும் கட்சியில் சேர வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் விஜய் ஓர் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
“இன்று என் தந்தை சந்திரசேகர், ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நோரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

இதன்மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்தி கொள்கிறேன். மேலும் எனது ரசிகர்கள் எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.