நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் (வயது 77). இவருக்கு சில நாட்களாக காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதைத் தொடர்ந்து இவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
இதில் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் வைரஸ் தொற்றிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சனின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய், 8 வயது மகள் ஆராதனா பச்சனுக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனினும் அபிஷேக் பச்சனின் குடும்பத்தினர், பணியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமிதாப் பச்சன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். குடும்பத்தினரும் ஊழியர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமையில் இருக்க கேட்டுக் கொள்கிறேன். கொரோனை பரிசோதனை மேற்கொள்வது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமிதாப் பச்சனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மருத்துவமனையில் இருந்து அமிதாப் வீடியோ பதிவை வெளியிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அந்த வீடியோ கடந்த ஏப்ரலில் வெளியான பழைய வீடியோவாகும். இப்போது அமிதாப் எந்த வீடியோவையும் வெளியிடவில்லை.
நடிகர் அபிஷேக் பச்சன் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கும் தந்தைக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. மும்பை மாநகராட்சியின் விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுகிறோம். இருவரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளோம். குழப்பம் அடைய வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.