பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில இளைஞரணி செயலாளர் வினோஜ் செல்வம் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் `ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை இழிவுபடுத்திய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு குறித்து தொடர்ந்து உண்மைக்குப் புறம்பாக நடிகர் சூர்யா பேசி வருகிறார். மோடி அரசின் மக்கள் நலத்திட்டம், சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்திற்காக சூர்யா எதிர்த்து வருகிறார். மேலும் படைப்பாளிகளின்உரிமையை பாதுகாக்கும் ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவு 2021-க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நடிகர் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் பா.ஜ.க இளைஞரணி மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நீட் தேர்வு குறித்து தமிழக மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. கோயில் நிலங்களை மீட்க தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா இரண்டாவது அலையை திறம்பட எதிர்கொண்ட பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்பட வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை குறைப்பு சமையல் எரிவாயு மானியம் குடும்ப தலைவிகளுக்கு மாத ஊதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வினோஜ் செல்வம், “நீட் தேர்வு வந்த பிறகு 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்திருக்கின்றனர். நுட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்” என்று கூறினார்.