சென்னை, அயனாவரத்தில் குடியிருப்பவர் சத்யா (பெயர் மாற்றம்) (63). இவரின் கணவர், உடல் நலம் சரியில்லாதவர். பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டனர். அதனால் மூதாட்டி கிடைத்த வேலைகளை செய்து கணவருடன் வாழ்ந்துவருகிறார். இவர் குடியிருக்கும் வீடு பத்துக்கு பத்து கொண்ட சிறிய அறை.
மூதாட்டி
கடந்த 18-ம் தேதி மூதாட்டி தனியாக வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தார். மூதாட்டி முடிந்தளவுக்கு போராடியுள்ளார்.
அதனால் மர்மனிதர் மூதாட்டியை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். உடலிலும் மனதிலும் ஏற்பட்ட காயங்களால் மூதாட்டி, கதறி அழுதார்.மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கண்விழித்தனர். பிறகு மூதாட்டி கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவத்தில் மூதாட்டி, காவல் நிலையத்தில் புகாரளிக்கவில்லை.

காதல்
சென்னை திருநின்றவூரில் பெற்ற மகள், காதலியின் மகள் என 2 சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த இறைச்சி கடைக்காரர் முரளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், சென்னை திருநின்றவூரைச் சேர்ந்தவர் சந்தியா (பெயர் மாற்றம் )இவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். கணவரைப் பிரிந்து சந்தியா தனியாக வசித்து வருகிறார். அப்போதுதான் முரளியுடன் காதல் ஏற்பட்டுள்ளது.
பாலியல் தொல்லை
சந்தியா தன்னுடைய 13 வயது மகளுடனும் முரளி, தன்னுடைய 16 வயது மகளுடனும் திருநின்றவூரில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினர். சந்தியா இல்லாத நேரத்தில் அவரின் மகளுக்கும் தன்னுடைய சொந்த மகளுக்கும் முரளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில் முரளியை கைது செய்துள்ளோம். முரளி மீது ஏற்கெனவே திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது. மேலும் தண்டையார் பேட்டை இரட்டை கொலை வழக்கும் உள்ளது.
இதுதவிர திருநின்றவூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி முரளி. தற்போது மகள், காதலி மகள் என 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலும் முரளி கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட முரளி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய உள்ளது என்றனர்.
பூட்டிய அறைக்குள்
அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வீட்டை விட்டு ஓடிய பேத்திக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக பாட்டி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்தபோது, வீட்டை விட்டு ஓடிய சிறுமி பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது திருத்தணியிலிருந்து வேலைக்காக சென்னை வந்த வெங்கடேஷ் (21) என்பவர் சிறுமியிடம் பேசியுள்ளார்.

ஆசை வார்த்தை கூறி சிறுமியை தன்னுடைய வீட்டுக்கு வெங்கடேஷ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை அறையில் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வீட்டிலிருந்து தப்பிய சிறுமி, திருத்தணி ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.
ஆந்திரா
ஊரடங்கு என்பதால் ரயில்கள் இயக்கப்படவில்லை. அதனால் சிறுமி திருத்தணி ரயில் நிலையத்தில் சுற்றிதிரிந்துள்ளார். அதைக் கவனித்த ரயில்வே போலீசார் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போதுதான் சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறி கதறி அழுதுள்ளார். அதனால் சிறுமியை மீட்ட ரயில்வே போலீசார் அயனாவரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வெங்கடேஷ் ஆந்திராவுக்கு சென்று தலைமறைவாகினார். அவரை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வெங்கடேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தைரிய சிறுமி
சென்னை பெரவள்ளூரில் கடைக்கு நடந்துச் சென்ற 11 வயது சிறுமி மீது மயக்க மருந்து தெளிந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக செம்பியம் அனைத்து மகளிர் போலீசார் ஹரிபாபு என்ற ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். சிறுமியின் துணிச்சலால் ஹரிபாபுவிடமிருந்து அவர் தப்பினார். சென்னையில் தொடர்ந்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதால் அதிர்ச்சியில் பெற்றோர்கள் உறைந்துபோய் உள்ளனர்.