சென்னையில் திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா, பிறந்தநாளன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை வியாசர்பாடியை அடுத்த எருக்கன்சேரி பகுதியைச் சேர்ந்தவர் தமிழன் பிரசன்னா. இவர் தி.மு.கவின் செய்தி தொடர்பாளர் இணைச் செயலாளராக உள்ளார். இவரின் மனைவி நதியா. 35 வயதாகும் இவருக்கு இன்று பிறந்தநாள். இந்தத் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
நதியா, தன்னுடை பிறந்தநாளை வெகுசிறப்பாகக் கொண்டாட விரும்பியிருக்கிறார். அந்த ஆசையை தமிழன் பிரசன்னாவிடம் கூறியிருக்கிறார். கொரோனா காலக்கட்டத்தில் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டாம் என பிரசன்னா கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதனால் நதியா, மனவருத்தம் அடைந்தார்.

நேற்றிரவு வழக்கம் போல அறையில் படுக்கச் சென்ற நதியா, காலையில் நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவைத் தட்டியிருக்கின்றனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற போது நதியா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், நதியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
தி.மு.க பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா, பிறந்தநாளன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.