லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெங்களூரு டாக்டர் ஷபில் அகமது (38) சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூருவில் லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ) வழக்கு பதிவு செய்தது. இதில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் தொடர்புடைய முகமது பை, பரூகான் பை, டாக்டர் உஸ்மான் கானி, முகமது அப்துல் மஜித், டாக்டர் ஷபில் அகமது, முகமது பஷத்துல்லா கோரி, சித்திகி பி உஸ்மான் ஆகிய 7 பேர் தலைமறைவாகினர்.

நாடு முழுவதும் பல்வேறு தீவிரவாத வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது. ஏழு பேரும் சவுதி அரேபியாவில் பதுங்கி இருப்பதாக என்ஐஏ-க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இன்டர்போல் என்ற சர்வதேச போலீஸாரின் உதவியோடு அவர்களை கைது செய்ய என்ஐஏ முயற்சி செய்தது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
கடந்த வாரம் சவுதி அரேபியாவில் டாக்டர் ஷபில் அகமதுவை (38), என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
கடந்த வாரம் அவரை டெல்லி அழைத்து வந்த அதிகாரிகள், நேற்று பெங்களூருவில் உள்ள சிறப்பு தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து என்ஐஏ விசாரிக்கிறது.
லஷ்கர் – இ – தொய்பாவுக்கு ஆள் சேர்த்தது, நிதி திரட்டி கொடுத்தது, சவுதி அரேபியாவில் அல் காய்தா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டது ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.