வரும் நவம்பர் வரை ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் முதல் மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 30-ம் தேதி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நவம்பர் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ஏற்கெனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு விலையில்லாமல் (இலவச) அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச அரிசி திட்டம் நவம்பர் மாதம் வரை தொடரும். இதன்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.