சென்னையில் 4 மாத வாடகை பாக்கியை கேட்ட வீட்டு உரிமையாளர் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார்.
குன்றத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் குணசேகரன். இவர் குன்றத்தூரின் பண்டார தெருவில் சொந்தமாக வீடு கட்டி ஒரு வீட்டில் அவரும் மற்றொரு வீட்டை வாடகைக்கும் விட்டுள்ளார். அந்த வீட்டில் அஜித் (21), என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இதற்கு மாதம் ரூ.4 ஆயிரம் வாடகையாகும்.

ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாத காரணத்தால் கடந்த நான்கு மாதங்களாக அஜித்தால் வீட்டுவாடகை கொடுக்க முடியவில்லை. அஜித் பெற்றோரிடம் நேற்றிரவு வீட்டு உரிமையாளர் குணசேகரன் வாடகை கேட்டுள்ளார்.
அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு வீட்டிற்கு வந்த அஜித்திடம், பெற்றோர் நடந்ததை கூறினர்.
ஆத்திரமடைந்த அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசேகரனை குத்தியுள்ளார். குத்தப்பட்ட குணசேகரன் தன்னை காத்துக்கொள்ள தெருவில் ஓடியுள்ளார். அப்போதும் விடாமல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.
குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து போன குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி அஜித்தை கைது செய்தனர்.
வீட்டின் உரிமையாளரை, வாடகைதாரர் ஓட, ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் சென்னை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.