‘இ சஞ்சீவனி’ திட்டத்தில் இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறுவது எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மத்திய அரசு சார்பில் கடந்த 2018 செப்டம்பரில் ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
தொலை மருத்துவ சேவை
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 2019 நவம்பரில் ‘இ சஞ்சீவனி’ தொலை மருத்துவ சேவை தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் சுகாதார, நல வாழ்வு மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. வைரஸ் பரவலை தடுக்க மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி கடந்த ஏப்ரலில் ‘இ சஞ்சீவினி’ தொலை மருத்துவ திட்டத்துக்கு புதிய வடிவம் கொடுக்கப்பட்டது.
மத்திய சுகாதாரத் துறை சார்பில் esanjeevaniopd.in என்ற இணையதளமும் esanjeevaniopd என்ற செயலியும் தொடங்கப்பட்டன. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து இ சஞ்சீவினி திட்டத்தை செயல்படுத்தின. இதன்மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே இலவசமாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற வழிவகை செய்யப்பட்டது.
பதிவு செய்வது எப்படி?
esanjeevaniopd.in இணையத்தில் நுழைந்தவுடன் வலதுபுறம் Patient registration பிரிவை கிளிக் செய்ய வேண்டும். அதில் செல்போன் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். செல்போன் எண்ணுக்கு பாஸ்வேர்டு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.அந்த பாஸ்வேர்டை உள்ளீடு செய்ய வேண்டும்.
அதன்பிறகு நோயாளியாக பதிவு செய்து டோக்கன் பெறுவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்கள் பெயர், பாலினம், மின்னஞ்சல், முகவரி, வயது, மாநிலம், மாவட்டம், நகரம், வீட்டு விலாசம் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.
டோக்கன் பெறுவதற்கான பக்கத்தை முழுமையாக பூர்த்தி செய்த பிறகு குறுஞ்செய்தியில் வந்த பாஸ்வேர்டை மீண்டும் உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பிறகு உங்களுக்கான எண், டோக்கன் எண் ஆகியவை செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்த இரு எண்களையும் பதிவு செய்தால் நீங்கள் காத்திருப்போர் பக்கத்துக்கு நுழைந்து விடுவீர்கள்.
மருத்துவருக்கு அழைப்பு விடுப்பதற்கான நேரம் தொடங்கியவுடன் அழைப்பை உறுதி செய்ய வேண்டும். அப்போது காணொலி வாயிலாக மருத்துவர் உங்களுடன் கலந்துரையாடுவார். மருத்துவ ஆலோசனைகளை பெற்ற பிறகு e-priscription பக்கத்துக்கு சென்று மருந்து சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இலவச மருந்துகள்
இந்த மருந்து சீட்டினை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மருந்துகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது தனியார் மருந்து கடைகளில் பணம் செலுத்தி மருந்துகளை வாங்கலாம்.
தமிழகத்தில் ‘இ சஞ்சீவினி’ திட்டத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொது மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. கரோனா நோயாளிகளுக்கான மருத்துவ ஆலோசனை மட்டுமன்றி மகப்பேறு, மனநலம், யோகா, இயற்கை மருத்துவம் குறித்த ஆலோசனைகளும் குறிப்பிட்ட கால நேரத்தில் வழங்கப்படுகின்றன. இதுதொடர்பான முழுமையான விவரங்கள் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் 865 மருத்துவர்கள் ‘இ சஞ்சீவினி’ சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக மக்களுக்காக 04068118726 என்ற உதவி எண்ணும் செயல்பாட்டில் உள்ளது.
நாடு முழுவதும் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ‘இ சஞ்சீவனி’ தொலை மருத்துவ திட்டம் அமலில் உள்ளது. இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர். தமிழகம், கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வாரத்தின் 7 நாட்களும் இ சஞ்சீவினி திட்டம் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
முதலிடத்தில் தமிழகம்
‘இ சஞ்சீவினி’ திட்டத்தில் அதிக மருத்துவ ஆலோசனைகளை வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இத்திட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 2,03,286 பேருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசத்தில் 1,68,553 பேர், கேரளாவில் 48,081 பேர், இமாச்சல பிரதேசத்தில் 41,607 பேர், ஆந்திராவில் 31,749 பேர், மத்திய பிரதேசத்தில் 21,580 பேர், உத்தராகண்டில் 21,451 பேர், குஜராத்தில் 16,346 பேர், கர்நாடகாவில் 13,703 பேர், மகாராஷ்டிராவில் 8,747 பேர் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர். நாளொன்றுக்கு தோராயமாக 8,500 மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.