தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் திருமூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 47). இவர் ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டம், ஹிரா நகரில் பி.எஸ்.எப். படையில் பணியாற்றி வந்தார். ஹவில்தாராக இருந்த இவர் கடந்த ஜூலை 25-ம் தேதி துப்பாக்கி தவறுதலாக வெடித்து கண்ணில் குண்டு பாய்ந்தது.
இதைத் தொடர்ந்து காஷ்மீரின் உதம்பூர் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவீர சிகிச்சை அளித்தும் கடந்த 1-ம் தேதி அவர் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த கிராமத்துக்கு 2-ம் தேதி எடுத்து வரப்பட்டது.
அங்கு நேற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் ஆனந்த், ஏராளமான பொதுமக்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
உயிரிழந்த திருமூர்த்திக்கு தமிழரசி என்ற மனைவியும் அகல்யா என்ற மகளும் அகத்தியன் என்ற மகனும் உள்ளனர்.