இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.3,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
சட்டப் படிப்பினை முடித்து கல்லூரிகளில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழும தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்பின்னர் இளநிலை வழக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 3 ஆண்டு காலம் பயிற்சி பெற வேண்டும்.
கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், வழக்கறிஞர்களாக பணியாற்ற குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
இந்த கால கட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் உள்ளனர். சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக் கொள்ள இயலாமல் வேறு மாற்றுத் தொழிலுக்கு சென்றுவிடும் நிலையும் உள்ளது.
எனவே இளம் வழக்கறிஞர்களுக்கு உதவும் வகையில் தகுதிகளின் அடிப்படையில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகள் காலத்துக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தை முதல்வர் பழனிசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில், 9 இளம் வழக்கறிஞர்களுக்கு முதல்வர் உதவித் தொகையினை வழங்கினார்.