நிவர் புயலைத் தொடர்ந்து வங்க கடலில் புதிய புயல் உருவாகிறது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் அண்மையில் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன்காரணமாக வடதமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதைத் தொடர்ந்து வங்க கடலில் புதிய புயல் உருவாகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
“வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. டிச. 1-ம் தேதி புயலாக மாறும். இந்த புயல் டிசம்பர் 2-ம் தேதி இலங்கையை கடந்து கன்னியாகுமரி கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது.
இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரியில் டிசம்பர் 1-ம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக டிச. 2-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில், அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்” என்று புவியரசன் தெரிவித்துள்ளார்.