கடந்த ஜூன் 18-ம் தேதி பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையின் தாய், உறவினரை மணமகள் வீட்டினர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் புதுமாப்பிள்ளை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காதல் திருமணம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரலை அடுத்த சிவகளை பரம்பு கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயி. இவரின் மகன் விக்னேஷ் ராஜா (22) இவர், ஏரல் முதலியார் தெருவைச் சேர்ந்த அருணாச்சலத்தின் மகள் சங்கீதா (20) காதலித்தார். இவர்களின் காதல் இருவீட்டினருக்கும் தெரிந்ததும் பிரச்சினை ஏற்பட்டது. விக்னேஷ் ராஜாவின் வீட்டில் சங்கீதாவை திருமணம் செய்த கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பையும் மீறி விக்னேஷ்ராஜா கடந்த ஜூன் 18-ம் தேதி சங்கீதாவை திருமணம் செய்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று சங்கீதாவின் அண்ணன் முத்துராமலிங்கம் என்ற ராஜா (23) மற்றும் அவரின் உறவினர்கள் சிவகளைக்கு வந்தனர். அப்போது விக்னேஷ்ராஜாவும் அவரின் உறவினராக அருணண் மகேஷ் (26) ஆகியோர் பஸ் நிறுத்தத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த முத்துராமலிங்கம் மற்றும் அவரின் உறவினர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியை எடுத்து விக்னேஷ் ராஜாவை வெட்டியுள்ளனர். அதை அருண் மகேஷ் தடுத்துள்ளார். அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

உயிர் தப்பிய புதுமாப்பிள்ளை
இந்த திடீர் தாக்குதால் நிலைக்குலைந்த விக்னேஷ் ராஜா, அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட வீட்டுக்கு வந்த விக்னேஷ் ராஜாவை அந்தப்பகுதியில் உள்ளவர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் விக்னேஷ் ராஜா கொடுத்த தகவலின்படி அருண் மகேஷையும் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அனுமதித்தனர்.
அதன்பிறகும் ஆத்திரம் தீராத முத்துராமலிங்கம் மற்றும் அவரின் உறவினர்கள் விக்னேஷ்ராஜாவின் வீட்டிற்கு வந்தனர். அங்கு விக்னேஷ் ராஜாவின் அம்மா பேச்சியம்மாளையும் தந்தை லட்சுமணயையும் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பேச்சியம்மாள் உயிரிழந்தார். லட்சுமணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரட்டை கொலை
இந்த இரட்டைக் கொலை குறித்து ஏரல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனையிலிருந்து புதுமாப்பிள்ளை விக்னேஷ் ராஜா, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.
இந்த இரட்டைக் கொலை குறித்து புதியதாக பொறுப்பேற்ற தூத்துக்குடி எஸ்.பி ஜெயகுமாருக்கு தகவல் கிடைத்ததும் அவர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரித்தார். கொலை நடந்த இடங்களில் ஆய்வு நடத்திய எஸ்.பி, ஜெயகுமார் உடனடியாக கொலையாளிகளைப் பிடிக்க ஏரல் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

8 மணி நேரத்தில்
இதையடுத்து கொலை நடந்த 8 மணி நேரத்தில் முத்துராமலிங்கம் மற்றும் அவரின் உறவினர்கள் அருணாசலம், முத்துசுடர் என மூன்று பேரைப் பிடித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். விசாரணைக்குப்பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இந்தக் கொலைக்கு காதல் திருமணமா காரணம் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏரலில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.