பாலிவுட்டை சேர்ந்த இளம் நடிகை திவ்யா சவுசே இன்று மரணமடைந்தார்.
மத்திய பிரதேச தலைநகர் போபாலை சேர்ந்தவர் திவ்யா (வயது 30). இவர் சிறுவயது முதலே கலைகளில் அதிக ஆர்வம் காட்டினார். கடந்த 2011-ம் ஆண்டில் மும்பையில் குடியேறிய அவர், எம்.டி.வியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தோன்றினார்.
இதே ஆண்டில் ‘ஷி மிஸ் யூனிவர்ஸ்’ அழகி பட்டத்தை வென்றார். கடந்த 2016-ம் ஆண்டில் ‘ ஹை அப்னே தில் தோ அவாரா’ என்ற இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். தனது இசைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஆல்பத்தையும் வெளியிட்டார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது முதல் திரைப்படங்களில் நடிக்கவில்லை. தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று மரணமடைந்துவிட்டதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
கடைசியாக கடந்த 11-ம் தேதி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டார். “எனது உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் இல்லை. சில மாதங்களாக நான் சமூக வலைதளத்தில் இல்லை. நான் இப்போது மரண படுக்கையில் இருக்கிறேன். வலி, துன்பம் இல்லாத இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.